இராணுவத்தில் பெண்களை சேர்க செளதி அரேபியா அரசு முடிவு

செவ்வாய், பெப்பிரவரி 27, 2024


செளதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒருபகுதியாக ராணுவத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. உயர் இராணுவ அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். தமதுர் பின்ட் யூசப் அல் ராமா என்ற பெண்மணி துணை தொழிலாளர் துறை அமைச்சராகியுள்ளார்.


இது ராணுவப் பணி, விருப்பம் இருக்கும் பெண்களுக்கு மட்டுமானது. அதாவது ராணுவத்தில் பெண்கள் பணிபுரிவது கட்டாயமக்கப்படவில்லை.


செளதி பிரசு ஏஜென்சி (SPA) வெளியிட்டுள்ள செய்திகளின்படி, பொது பாதுகாப்பு இயக்குநரகம், ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு தொடர்பான அறிக்கையை ஞாயிற்றுக் கிழமையன்று வெளியிட்டது. அதன்படி, ரியாத், மக்கா, மதீனா, அல்-காசிம், ஆசிர், அல் பகா மற்றும் சர்க்கியா ஆகிய நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.


செளதி அரசின் சூரா ஆணையத்தின் ஒரு உறுப்பினரின் சார்பில் முன்மொழியப்பட்ட இந்த திட்டத்தின்படி, ராணுவப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் ஆண்டில் மூன்று மாதங்கள் கட்டாயம் பணிபுரியவேண்டும். ஆனால், இதுதொடர்பாக ஆணையத்திலும், சமூக ஊடகங்களிலும் வெவ்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.


செளதி அரசின் ராணுவத்தில் சேர்வதற்கான அடிப்படை தகுதி விண்ணப்பிப்பவர்கள் அந்த நாட்டின் குடிமகளாக இருக்கவேண்டும். கல்வித் தகுதியாக, உயர்நிலை பள்ளிப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு படித்திருக்கவேண்டும். குறைந்தபட்ச வயது 25 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானால் வெளியிடப்பட்ட `விசன் 2030’ என்ற சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்முயற்சிகளில் இதுவும் ஒன்று. இவரே நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சராவார்.


பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் செளதி அரேபியா மன்னர் சல்மான் ஆணை பிறப்பித்தார். 2018 யூன் மாதத்துக்குள் இது அமல்படுத்தப்படும் என்றும் அறி்விக்கப்பட்டது. அண்மையில் பெண்கள் கால்பந்து போட்டிகளை பார்க்க விளையாட்டு அரங்குகளுக்கு அனுமதிக்கப்பட்டனர்.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் திரையரங்குகளுக்கு உரிமம் வழங்குவதாகவும் செளதி அரேபிய அரசு அறிவித்தது.


சௌதி அரேபியாவின் அரச குடும்பம் மற்றும் மத அமைப்பு சன்னி இசுலாத்தின் ஒரு கடினமான வடிவமான வகாபிசத்தையும் தீவிரமாகக் கடைபிடிக்கின்றன. இந்த இசுலாமிய சட்டங்களின்படி, பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


செளதி அரேபியாவில் பெண்கள் தனியாக பயணிக்க அனுமதி கிடையாது. பெண்களுடன் ஒரு குடும்ப உறுப்பினர் செல்லவேண்டும். அந்நாட்டில் உள்ள பெரும்பாலான உணவகங்களில், ஆடவர்களுக்கான பிரிவு ஒன்று, குடும்பத்தாரோடு வருபவர்களுக்கு ஒன்று என இரண்டு பிரிவுகள் உள்ளன.


கணவனுடன் அல்லது குடும்பத்துடன் வரும் பெண்களே உணவகங்களில் அனுமதிக்கப்படுவார்கள்

மூலம் தொகு