இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை பயணம்

ஞாயிறு, ஏப்பிரல் 15, 2012

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் நாளை திங்கட்கிழமை இலங்கைக்குச் செல்லவிருக்கிறது. இக்குழு இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகப் பகுதிகள், கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தமிழர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.


இக் குழுவின் பயணம் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்த நாள் இக்குழு இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் பசில் ராஜபக்சவைச் சந்திக்கிறது. பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி. எல். பீரிசையும் சந்திக்கின்றது.


பின்னர் இக்குழு இலங்கை நாடாளுமன்றத்திற்குச் சென்று அங்கு அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவின் மற்றுமொரு சகோதரரும், அவைத்தலைவருமான சாமல் ராஜபக்சவைச் சந்திக்கின்றது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடுகிறது.


இக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளது.


இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் சில இந்த குழுவால் எந்த பயனும் இல்லை எனத் தெரிவித்துள்ளன. மதிமுக தலைவர் வைகோ இந்த பயணத்தினால் எந்த பயனும் இல்லை என கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அஇஅதிமுக தலைவர் ஜெயலலிதா ஆகியோர் தாங்கள் கட்சிகளின் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம்பெற போவதில்லை என கூறியுள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி, ஏற்கனவே 2009 ஆம் ஆண்டில் சென்ற குழுவினரின் அனுபவத்தில் இருந்து இந்த குழுவின் பயணத்தால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என அறிந்து கொண்டதாக கூறியுள்ளார்.


இதேவேளையில், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் குழுவினர்களுக்கு இலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் தமது பிள்ளைகள் உறவுகளின் விடுதலைக்காக இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.


மூலம் தொகு