இந்தியா - பிரான்ஸ் நாடுகளுக்கிடையே அணுமின் உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது

செவ்வாய், திசம்பர் 7, 2010

பிரான்சிடம் இருந்து அணு உலைகளை வாங்குவதற்கான உடன்பாடு பிரெஞ்சு அரசுத்தலைவர் நிக்கோலா சர்கோசிக்கும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேசுவார்த்தைகளின் போது கையெழுத்திடப்பட்டது.


சர்கோசி நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் 10000 மெகா வாட் இந்திய - பிரான்ஸ் அணு உலைத் திட்டத்தின் உடன்பாட்டில் கையெழுத்திட்டார். முதற்கட்டமாக இந்தியாவில் மிகவும் நவீன தொழில் நுட்பம் கொண்ட 1650 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு மின் உலைகள் 10 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியில் நிறுவப்படும். பிரான்ஸ் நாட்டின் தனியார் நிறுவனம் அவேராவுடன் (Avera) இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.


இந்த அணு மின் நிலையம் மகாராட்டிர மாநிலத்தில் ஜைதாபூரில் அமைக்கப்படும். இவ்வுலைகள் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படக் கூடியதாக இருக்கும் மேலும் இவ்வணு மின் நிலையத்திற்குத் தேவைப்படும் அணுக்கரு எரிபொருட்களை பிரான்ஸ் நாடு வழங்குவதற்கு இசைந்துள்ளது.


இருந்தாலும், ஜைதாபூரில் வசிக்கும் மக்கள் இங்கு அணு மின் நிலையத்தை அமைப்பதை விரும்பவில்லை, அவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


இந்தியாவில் 22 அணுமின் உலைகள் உள்ளன. மேலும் அணுமின் உலைகளை அமைக்க அது திட்டமிட்டுள்ளது.

தொடர்புள்ள செய்திகள் தொகு


மூலம் தொகு