இந்தியாவில் பாலம் இடிந்ததில் 40 பேர் உயிரிழப்பு

சனி, திசம்பர் 26, 2009

இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் சம்பல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்ததில் 45 பேர் உயிரிழந்து இருக்கலாம் என உயர் காவல் துறை அதிகாரி இராஜீவ் டசோட் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் இராசத்தான் மாநிலம் அமைவிடம்

17 பேர் உயிரிழந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. காணாமல் போனோரைத் தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.​ மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.​ நீருக்குள் நீந்தி மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கான பிரத்யேகப் பயிற்சி பெற்ற வீரர்களும் குஜராத்தில் இருந்து அழைக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


கட்டுமானத்தில் உள்ள இப்பாலம் கோட்டா நகருக்கு அருகில் உள்ளது. இது ஜெய்ப்பூருக்கு 270 கிமீ தொலைவிலும் ஜோத்பூருக்கு 350 கிமீ தொலைவிலும் உள்ளது.


பிபிசியில் இவ்விபத்து வியாழக்கிழமை நடந்ததென்றும் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெள்ளிக்கிழமை நடந்ததென்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.


கோடா நகரை ஒட்டி ஓடும் சம்பல் ஆற்றின் குறுக்கே 1.4 கிலோ மீட்டர் நீளம் உள்ள தொங்குபாலம் கட்டப்பட்டு வருகிறது .​ 2007-ம் ஆண்டு தொடங்கிய இந்த பால கட்டுமானப் பணி 2011-ல் நிறைவடையவுள்ளது.


இந்நிலையில் வியாழக்கிழமை இந்த பால கட்டுமானப் பணியில் 100-க்கு மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.​ அப்போது பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.


இப்பாலமானது தென் கொரியாவின் ஹையுண்டாய் இஞ்சினியரிங் மற்றும் இந்தியாவின் காம்மன் இந்தியா நிறுவனங்களால் கூட்டாக கட்டப்படுகிறது.


மூலம் தொகு