இந்தியாவின் தொலையுணர் செயற்கைக்கோள் ரிசோர்சுசாட் - 2ஏ விண்ணில் ஏவப்பட்டது

சனி, திசம்பர் 7, 2024

சிறிஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து, புதன்கிழமை காலை 10.25 மணிக்கு பிஎஸ்எல்வி - சி 36 ஏவுகலன் மூலம் ரிசோர்சுசாட் -2ஏ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.


தற்போது ஏவப்பட்டிருக்கும் ரிசோர்சுசாட் - 2ஏ செயற்கைக்கோளின் எடை 1235 கிலோவாகும். ஏவப்பட்டதிலிருந்து 18 நிமிடங்களில் பூமியிலிருந்து 822 கிலோ மீட்டர் தூரத்தில் செயற்கைக் கோள் அதன் சுற்றுப்பாதையில் தள்ளப்பட்டது. இந்த முறை ஏவிகலனில் ஒரு நிழற்படக்கருவி பொருத்தப்பட்டு செயற்கைக் கோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து செல்லும் காட்சியையும் இசுரோ அறிவியலாளர்கள் கண்டனர்.


ஏற்கனவே இந்தியாவால் செலுத்தப்பட்டுள்ள ரிசோர்சுசாட்-1, ரிசோர்சுசாட்-2 ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இந்த செயற்கைக்கோள் செயல்படும். இந்த ரிசோர்ஸ்சாட் செயற்கைக்கோள்கள் புவியைத் தொடர்ந்து படம் எடுப்பதன் மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபடும்.


இசுரோவின் மிகப் பிரபலமான பிஎஸ்எல்வி ஏவுகலன் இதுவரை 38 முறை ஏவப்பட்டிருக்கிறது. அதில் 36 முறை வெற்றி கிடைத்திருக்கிறது. 1994-2016 காலகட்டத்தில் பிஎஸ்எல்வி மூலம் 121 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டிருக்கின்றன. இவற்றில், 79 செயற்கைக்கோள்கள் வெளிநாட்டினருக்காக ஏவப்பட்டவை. 42 செயற்கைக்கோள்கள் இந்தியாவுக்கு சொந்தமானவை.


மூலம் தொகு