ஆத்திரேலியக் காட்டுக் கொள்ளைக்காரன் நெட் கெலியின் எச்சங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

வியாழன், ஆகத்து 2, 2012

கொலைக்குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்ட ஆத்திரேலியக் காட்டுக் கொள்ளைக்காரன் நெட் கெலியின் எச்சங்கள் அவன் இறந்து 130 ஆண்டுகளின் பின்னர் நல்லடக்கத்திற்காக அவனது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.


1880 இல் தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள் நெட் கெலி

1880களில் கொள்ளைக்கூட்டத் தலைவனாக இருந்த நெட் கெலியின் தலையில்லா எச்சங்கள் கடந்த ஆண்டு நவம்பரில் மரபணுப் பரிசோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட்டிருந்தன. ஆத்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் முன்னாள் பெண்ட்ரிட்ஜ் சிறைச்சாலைக்கு வெளியே உள்ள மனிதப் புதைகுழி ஒன்றில் இவனது எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


"நெட் கெலியின் இறுதி நல்லடக்கம் நடைபெற கெலியின் உறவினர்கள் தற்போது ஆயத்தப்படுத்துகிறார்கள்," என கெலியின் சகோதரியின் கொள்ளுப்பேத்தி எலென் ஹொலோ என்பவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.


நெட் கெலி ஒரு பயங்கரக் கொலைகாரனாக அல்லது கொள்ளைக்காரனாக சிலரால் பார்க்கப்பட்டாலும், பலர் அவனை குடியேற்றவாதிகளுக்கு எதிராகப் போரிட்ட ஒரு இன வீரனாகவே பார்க்கின்றனர்.


1880 ஆம் ஆண்டில் அவன் பிடிபடுவதற்கு முன்பு மூன்று காவல்துறையினர் உட்பட ஆறு பேரைப் படுகொலை செய்தான். மேலும் பலர் இவனது துப்பாக்கிச் சூட்டுக்குக் காயமடைந்தனர். அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் பழைய மெல்பேர்ண் சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனது உடல் மனிதப் புதைகுழிக்குள் போடப்பட்டு காணாமல் போய்விட்டது. பின்னர் புதைகுழியில் இருந்த உடல்கள் 1929 ஆம் ஆண்டில் பெண்ட்றிட்ச் சிறைக்கு மாற்றப்பட்டது. இப்புதகுழி மீண்டும் 2009 ஆண்டில் தோண்டப்பட்டது.


நெட் கெலியின் கதை பின்னர் பல திரைப்படங்கள், மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்குக் கதைக்கருவாயிற்று.


மூலம் தொகு