அவுஸ்திரேலியத் தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழ் அகதி தற்கொலை

புதன், அக்டோபர் 26, 2011

சிட்னி நகரில் உள்ள விலவூட் குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


சூட்டி என அழைக்கப்படும் 27 வயதான மேற்படி இளைஞர் கடந்த நள்ளிரவுக்குப் பின் அதிகாலை 3 மணியளவில் மரணமானதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.


தடுப்பு முகாமில் இச்சம்பவம் நடந்தது கவலைப்படக்கூடிய சம்பவம் என ஆத்திரேலியாவின் முன்னாள் குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் எவான்ஸ் தெரிவித்தார். இறந்தவரது குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.


இவர் இரு ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்ததாக விலாவூட் குடிவரவு தடுப்பு நிலையத்திலுள்ள அவரின் சகா ஒருவர் தெரிவித்துள்ளார். இவரது இளைய சகோதரர் ஒருவர் இலங்கையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவரது குடும்பத்துடன் தொடர்புகளை மேற்கொள்ள அதிகாரிகள் முயன்று வருகின்றனர். இவரது இறப்பு சம்பந்தமாக தகுந்த மரண விசாரணைகள் நடத்தப்படும் என குடிவரவுத் துறை அமைச்சுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


தீபாவளிப் பண்டிகை வைபவமொன்றில் கலந்துகொள்வதற்கு இவ்விளைஞர் அனுமதி கோரியிருந்தாகவும் அக்கோரிக்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டதாகவும் அகதிகளுக்கான நடவடிக்கை கூட்டமைப்பின் பேச்சாளர் இயன் றின்ரோல் தெரிவித்துள்ளார்.


இதேவேளை தற்கொலை செய்துகொண்ட நபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒருவர் அல்ல என தீர்ப்பளிக்கப்பட்டவர் என வெளியான செய்திகளை அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பிரௌன் நிராகரித்துள்ளார்.


இந்த இளைஞரின் அகதி அடைக்கலக் கோரிக்கை மூன்று மாதங்களுக்கு முன்னர் ஏற்கப்பட்டிருந்தது. ஆனாலும், பாதுகாப்பு அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தினால், அவர் விடுவிக்கப்படாமல் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பல்வேறு நிறுவனங்களுடனான அவரின் தொடர்புகள் ஆராயப்பட்டு வந்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.


மக்கள் தமது கோரிக்கைள் மதிப்பிடப்படுவதற்கான வாய்ப்பை கொண்டிருப்பதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் தேசிய பாதுகாப்புடன் தொடர்டைய விடயங்களில் சமரசம் செய்துகொள்ள முடியாது, செய்துகொள்ளவும் மாட்டோம் என அமைச்சர் கிறிஸ் பிரௌன் தெரிவித்தார்.


கடந்த ஆண்டு மூன்று பேர் இம்முகாமில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


மூலம் தொகு