அலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு சிறை

சனி, மே 21, 2011

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி) ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ராஜ்ய சபா உறுப்பினர் கனிமொழிக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.


கனிமொழியுடன், கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண்மை இயக்குநர் சரத்குமாரும் சிறையிலடைக்கப்பட்டார். அவர்களைப் பிணையில் விட முடியாது என்று மத்தியப் புலனாய்வுத்துறையின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தீர்ப்பளித்தார்.


குற்றத்தின் தீவிரம், தன்மை, குற்றச்சாட்டுக்களின் அளவு, சாட்சிகளின் பலம், சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பிணை வழங்க முடியாது என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார். பெரும்பாலான சாட்சிகள், கலைஞர் தொலைக்காட்சியில் பணியாற்றுவதால், குற்றம் சாட்டப்பட்டவர்களை பிணையில் விட்டால் அந்தச் சாட்சிகள் மீது அவர்கள் தங்கள் செல்வாக்கை செலுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நீதிபதி கூறியுள்ளார்.


முன்னதாக 2ஜி முறைகேட்டில் மத்திய தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று குற்றம் சாட்டிய புலனாய்வுத்துறை கனிமொழி, சரத்குமார் ஆகியோரது பெயர்களை இரண்டாவது குற்றப்பத்திரிகையில் சேர்த்தது.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு