மெக்சிக்கோ சிறை உடைப்பில் 130 இற்கும் அதிகமான கைதிகள் வெளியேறினர்

செவ்வாய், செப்டெம்பர் 18, 2012

மெக்சிக்கோவில் அமெரிக்க எல்லைக்கருகில் உள்ள சிறை ஒன்றில் இருந்து 130 இற்கும் அதிகமான சிறைக்கைதிகள் சிறையை உடைத்து தப்பியோடினர்.


பீதராசு நேக்ராசு என்ற நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 132 பேர் தப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலையினுள்ளேயுள்ள தச்சுப் பட்டறை ஒன்றில் இருந்து சுரங்கப் பாதை ஒன்றை அமைத்து அதனூடாகக் கைதிகள் தப்பியுள்ளனர். 2.9 மீட்டர் ஆழமும், 7 மீட்டர் நீளமும் கொண்ட இந்தச் சுரங்கத்தினூடாக ஒருவர் பின் ஒருவராகக் கைதிகள் தப்பியோடியுள்ளதாக மெக்சிக்கோ அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைப் பணிப்பாளரும், இரண்டு ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தப்பியோடிய கைதிகளைத் தேடி மாபெரும் தேடுதல் வேட்டையை மெக்சிக்கோ காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். அமெரிக்க எல்லைப் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.


தப்பியோடிய ஒவ்வொரு கைதி பற்றியும் தகவல் தெரிவிப்போருக்கு 200,000 பேசோக்கள் ($15,600) வெகுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.


மூலம் தொகு