மெக்சிக்கோவை 7.4 அளவு கடும் நிலநடுக்கம் தாக்கியது

புதன், மார்ச்சு 21, 2012

மெக்சிக்கோவின் பசிபிக் கரையருகில் பெரும் நிலநடுக்கம் நேற்றுத் தாக்கியது. குவெரேரோ மாநிலத்தில் ஒமிட்டெபெக் நகரில் இருந்து 25 கிமீ கிழக்கே 18 கிமீ ஆழத்தில் 7.4 அளவு நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் தலைநகர் மெக்சிக்கோ நகரில் உள்ள அலுவலக ஊழியர்கள் அனைவரும் தமது பணியிடங்களை விட்டு வெளியேறினர். ஒரு நிமிட நேரம் கட்டிடங்கள் அதிர்ந்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். குவெரேரோ மாநிலத்தில் 500 இற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாநில முதல்வர் தெரிவித்தார். எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.


நிலநடுக்கத்தின் பின்னரான அதிர்வுகள் ஆறு தடவைகள் தாக்கியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அதிர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.


கடந்த ஆண்டு டிசம்பரில் இதே மாநிலத்தில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தினால் இருவர் உயிரிழந்தனர். 1985 ஆம் ஆண்டில் மெக்சிக்கோவில் இடம்பெற்ற 8.1 அளவு நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.


மூலம் தொகு