மும்பையில் தொடர் மாடிக் குடியிருப்பு இடிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழப்பு

வெள்ளி, ஏப்பிரல் 5, 2013

இந்தியாவின் வணிக நகரான மும்பைக்கு அருகில் உள்ள தாணேயில் கட்டி முடிக்கப்படாத தொடர் மாடிக் குடியிருப்புக் கட்டடம் ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை இடிந்து வீழ்ந்ததில் 23 சிறுவர்கள் உட்படக் குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 60 பேர் காயமடைந்தனர். மேலும் பலர் இடிபாடுகளிடையே சிக்குண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இன்னமும் கட்டி முடிக்கப்படாத இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலைகள் பூர்த்தியாவதற்கு முன்னரே பலர் அங்கு குடி புகுந்து விட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். கட்டடம் முழுவதும் இடிந்து வீழ்ந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். மும்பையின் புறநகர்ப் பகுதியான தாணேயில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீட்புப் பணிகள் நேற்றிரவு முழுவதும் இடம்பெற்றது.


குறைந்தது நான்கு மாடிகள் கட்டி முடிக்கப்பட்டு குடியிருப்பாளர்கள் குடி புகுந்துள்ளனர். மேலும் மூன்று மாடிகள் முடிக்கப்பட்டு எட்டாவது மாடி கட்டப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே இடிந்து வீழ்ந்துள்ளது. இறந்தவர்களில் பலர் கட்டடத் தொழிலாளிகள் எனத் தெரிகிறது.


கடந்த ஆண்டு டிசம்பரில், மகாராட்டிராவில் வாகோலி நகரில் இவ்வாறான கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். கடந்த செப்டம்பரில் புனே நகரில் கட்டடம் இடிந்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

இறந்தவர்களை தேடும் பணி ஏப்ரல் 6 அன்று நிறுத்தப்பட்டது.


மூலம் தொகு