மாஸ்கோ மாநகர முதல்வர் லுஷ்கோவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்

செவ்வாய், செப்டெம்பர் 28, 2010

இரசியத் தலைநகர் மாஸ்கோ மாநகர முதல்வர் யூரி லுஷ்கோவை அரசுத்தலைவர் திமீத்ரி மெத்வேதெவ் பதவியில் இருந்து அகற்றியுள்ளார்.


யூரி லுஷ்கோவ்

74 அகவையுடைய லுஷ்கோவ் “அரசுத்தலைவரின் நம்பிக்கையை இழந்து விட்டார்” என்று காரணம் காட்டியே பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக டாஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. 1992 ஆம் ஆண்டில் இருந்து மாநகர முதல்வர் பதவியில் இருந்து வந்துள்ள லுஷ்கோவ் கடந்த சில வாரங்களாக கிரெம்ளினின் விமரிசனத்திற்குள்ளாகியிருந்தார்.


மாஸ்கோவின் பதில் மாநகர முதல்வராக லுஷ்கோவின் ஆட்சியில் பிரதித் தலைவராக இருந்த விளாதிமிர் ரெசின் நியமிக்கப்பட்டுள்ளார்.


மாஸ்கோ முதல்வர்கள், மற்றும் பிராந்திய ஆளுனர்களை தேர்தல்கள் எதுவும் இல்லாமல் பதவியில் இருந்து அகற்ற இரசிய அரசுத்தலைவருக்கு அதிகாரம் உள்ளது.


லுஷ்கொவும் அவரது கோடீசுவர மனைவி யெலேனா பத்துரீனாவும் பல்வேறு ஊழல் குற்றச்சட்டுக்களுக்கு அண்மைக்காலங்களில் இலக்காயினர். குறிப்பாக அரசு தொலைக்காட்சி நிறுவனம் இவர் மீது பல ஊழல் குற்றங்களை சுமத்தியிருந்தது.


யூரி லுஷ்கோவ் இரசியாவின் மிகவும் பலம் வாய்ந்த அரசியல்வாதி ஆவார். கிரெம்லின் சார்பு ஐக்கிய ரஷ்யக் கட்சியின் முக்கிய மூத்த உறுப்பினரும் ஆவார்.


அண்மைக்காலங்கலில் வொல்ககொராட், சிவெர்தோவ்ஸ்க், பாசுகொர்டொஸ்தான் போன்ற நகர முதல்வர்கள் உட்படப் பல மூத்த தலைவர்களை மெட்வேடெவ் பதவியில் இருந்து அகற்றியுள்ளார்.


மூலம்