பாக்கித்தானுக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பு நிதியை அமெரிக்கா குறைத்தது

திங்கள், சனவரி 2, 2012

பாக்கித்தானுக்கு ஐக்கிய அமெரிக்கா வழங்கி வந்த இராணுவ உதவிக்கான தொகை ரூ. 5 லட்சத்து 84 ஆயிரத்து 158 கோடி குறைக்கப்பட்டுள்ளது. முன்பு அளிக்கப்பட்டு வந்த தொகையில் இருந்து சுமார் 60 சதவீதம் அளவு குறைக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கான நிதி மசோதாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். பாக்கித்தானுக்கான உதவித்தொகை குறைப்பு பாக்கித்தான் - அமெரிக்க உறவில் மேலும் ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.


பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே பாக்கித்தானுக்கு அமெரிக்கா பெருமளவில் நிதி வழங்கி வந்தது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாக்கித்தான் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், முக்கியமாக நாசகர வெடிகுண்டுகள் தயாரிப்பதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை பாக்கித்தான் எடுத்துள்ளது என்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்க காங்கிரசில் முன்னதாக அறிக்கை அளித்தது.


ஐக்கிய அமெரிக்காவில் 2012-ம் ஆண்டுக்கான பாதுகாப்புத் துறை செலவுக்காக ரூ.35 லட்சத்து 15 ஆயிரத்து 570 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, உள்நாட்டுப் பாதுகாப்பு போன்றவற்றுக்காக சிறப்பு கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒபாமா தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் துறைக்கு இவ்வளவு அதிகம் நிதி ஒதுக்கப்பட்டதை நியாயப்படுத்தியுள்ள அவர், அல்-கொய்தா அமைப்பையும், ஒசாமாவையும் ஒழித்ததை அதற்கு உதாரணமாகக் கூறியுள்ளார்.


மூலம் தொகு