பதற்றத்திற்கு நடுவில் 9/11 தாக்குதல் நினைவு கூரப்பட்டது

ஞாயிறு, செப்டம்பர் 12, 20201

நியூயோர்க்கின் மையப் பகுதியில் இசுலாமிய மையம் ஒன்று அமைக்கும் திட்டம் குறித்த சர்ச்சை, மற்றும் குரான் நூலெரிப்பு அச்சுறுத்தல் போன்ற பதற்றங்களுக்கு மத்தியில் 2001, செப்டம்பர் 11 தாக்குதலின் 9வது ஆண்டு நினைகூரல் நிகழ்வை ஐக்கிய அமெரிக்கா நேற்று நடத்தியது.


நியூயோர்க்கின் உலக வர்த்தக நிலைய இரட்டைக் கோபுரங்கள் மீதும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் மீதும் நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் விமானத் தாக்குதல்களில் 2752 பேர் கொல்லப்பட்டனர். உறவினர்கள் கொல்லப்பட்ட தங்கல் உறவுகளின் பெயர்களை அங்கு படித்தனர். இரட்டைக் கோபுரங்கள் மீது இரு விமானங்கள் தாக்கிய நேரத்தை குறிக்கும் முகமாக அந்தத்தருணத்தில் மௌனாஞ்சலி செலுத்தப்பட்டது.


பெண்டகன் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அரசுத்தலைவர் பராக் ஒபாமா கலந்து கொண்டு உரையாற்றுகையில், "அமெரிக்கா இசுலாம் மீது எப்போதும் போரை அறிவிக்கவில்லை," என்றார்.


முன்னதாக, இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடமான கிரவுண்ட் சீரோ அருகே இசுலாமிய நிலையம் ஒன்று கட்டப்படும் என்று திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குரானை எரிக்கப் போவதாக கூறியிருந்த பாதிரியார் டெரி ஜோன்ஸ் அத்திட்டம் முற்றாக கைவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


இதேவேளை, சர்ச்சைக்குரிய மசூதி திட்டத்திற்கு ஆதரவானதும் எதிரான குழுக்கள் நினைவு நிகழ்வுகள் முடிவடைந்தபின் இரட்டைக் கோபுரம் இடிந்து வீழ்ந்த இடத்துக்கு சமீபமாக பேரணிகளை நடத்தினர்.

தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு