நைஜீரியாவில் பொதுமக்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு, 30 பேர் உயிரிழப்பு

செவ்வாய், அக்டோபர் 9, 2012

நைஜீரியாவின் வட-கிழக்கு நகரான மைதுகுரியில் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் சுட்டதில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர், வீடுகள் பல தீக்கிரையாக்கப்பட்டன.


குண்டுவெடிப்பு ஒன்றில் இரு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே இராணுவத்தினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் தாம் பொதுமக்கள் மீது தாக்குதல் எதையும் நடத்தவில்லை என இராணுவப் பேச்சாளர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.


மைதுகுரி நகரம் போக்கோ ஹரம் போராளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தமாட்டுரு நகரில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற சண்டையில் 30 போராளிகள் வரை கொல்லப்பட்டனர்.


இராணுவத்தினருக்கும், போராளிகளுக்கும் இடையில் இடம்பெறும் சண்டைகளில் பொதுமக்களே அதிகம் கொல்லப்படுகிறார்கள் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். 2010 ஆம் ஆண்டு முதல் மத்திய மற்றும் வடக்கு நைஜீரியப் பகுதிகளில் இடம்பெற்று வரும் தாக்குதல்களில் இதுவரை 1,400 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.


மூலம் தொகு