தெற்கு சூடானின் கிளர்ச்சியாளர்கள் நாட்டின் பெரும் பகுதியைக் கைப்பற்றியிருப்பதாக அறிவிப்பு

ஞாயிறு, திசம்பர் 22, 2013

தெற்கு சூடானில் யுனிட்டி என அழைக்கப்படும் எண்ணெய் வளமிக்க பிரதேசம் உட்பட நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தெற்கு சூடானின் முன்னாள் பிரதி சனாதிபதி ரெயில் மச்சார் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள படையினர் தமது தலைமையின் கீழ் இயங்குகின்றனர் என அவர் தெரிவித்தார்.


கிளர்ச்சியாளர்களின் அரசுக் கவிழ்ப்பு முயற்சியைத் தாம் முறியடித்திருந்ததாக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. தற்போது நாட்டின் நிலைமை உள்நாட்டுப் போருக்கு இழுத்துச் செல்வதாக உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கிளர்ச்சியாளர்களுடன் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 500 பேர் வரையில் உயிரிழந்தனர்.


இப்பிரச்சினைக்குத் தீர்வு காண இரு தரப்பினரும் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என ஐநா செயலாளர் பான் கி-மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.


தாம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள மச்சார், ஆனால் அதற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் எத்தியோப்பியா போன்றதொரு நடுநிலை நாடொன்றில் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.


அமெரிக்கக் குடிமக்களை வெளியகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நான்கு அமெரிக்கப் படையினர் பயணம் செய்த வானூர்தி ஒன்று சுடப்பட்டதை அடுத்து அந்நால்வரும் காயமடைந்தனர்.


மூலம் தொகு