டோகோவில் தேர்தல் சீர்திருத்தங்களை எதிர்த்து பெரும் ஆர்ப்பாட்டம்

சனி, சூன் 16, 2012

மேற்காப்பிரிக்க நாடான டோகோவில் அண்மையில் கொண்டு வரப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவானவை எனக் கூறி பல்லாயிரக்கணக்கானோர் தலைநகர் லோமேயில் நேற்று மூன்றாவது நாளாக மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்பாட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். ஆங்காங்கே மோதல்களும் இடம்பெற்றுள்ளன. 30 பேர் வரையில் காயமுற்றனர்.


இவ்வாண்டு அக்டோபரில் இடம்பெறவிருக்கும் அந்நாட்டுத் தேர்தல் முறைகளில் சீர்திருத்தங்களை அந்நாடு அரசு முன்னதாக அறிவித்திருந்ததை அடுத்தே கலவரங்கள் மூண்டன. அரசுத்தலைவர் ஒருவர் தேர்தலில் பல முறை போட்டியிடக்கூடியதாக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.


கடந்த 40 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே டோகோ நாட்டில் அரசுத்தலைவர்களாக உள்ளனர். பௌரி ஞாசிங்பி அவரது தந்தையின் 38 ஆண்டு கால ஆட்சியின் பின்னர், 2005 ஆம் ஆண்டில் இறந்த பின்னர் அரசுத்தலைவராகப் பதவியேற்றார். பௌரி ஞாசிங்பி 2010 ஆம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இரண்டு தடவைகள் மட்டுமே போட்டியிட வழிவகுக்கும் 1992 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும் படி ஆர்ப்பாட்டக்காரகள் கோரி வருகின்றனர். இந்தச் சட்டம் 2002 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தினால் திருத்தப்பட்டது.


மூலம் தொகு