சைபீரியாவில் பல கோடிக்கணக்கான காரட்டு வைரங்கள் நிறைந்த மாபெரும் வயல் கண்டுபிடிப்பு

வியாழன், செப்டெம்பர் 20, 2012

உருசியாவின் சைபீரியாப் பிரதேசத்தில் விண்கல் ஆக்குப் பள்ளம் ஒன்றின் அடியில் பலகோடிக்கணக்கான காரட்டு வைரங்களைக் கொண்ட மாபெரும் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உருசிய அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த வைரங்கள் வழமையான வைரங்களை விட இரண்டு மடங்கு கடினமானவை என்றும் தொழிற்துறையில் பயன்படுத்தக்கூடியவை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.


சைபீரியாவில் உள்ள பொப்பிகை கிண்ணக்குழி

35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் ஒளிர்விண்கல் ஒன்றின் மோதுகையால் உருவான 62 மைல் அகல பொப்பிகை என்ற கிண்ணக்குழியின் அடியில் இந்த வைரக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


இவ்வாறான வைரங்கள் இப்பகுதியில் இருப்பது 1970களில் சோவியத் ஆட்சிக் காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் இப்போது தான் இதுகுறித்தான தகவல்கள் வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளன.


"பொப்பிகை பள்ளத்தாக்கில் உள்ள இந்த வைரங்கள் உலகில் உள்ள வைர வயல்களை விட பத்து மடங்கு பெரியது," என நோவசிபீர்ஸ்க் நிலவியல், மற்றும் கனிமவியல் ஆய்வுக் கழகத் தலைவர் நிக்கொலாய் போக்கிலென்கோ செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். "நாம் திரில்லியன் கணக்கான காரட்டுகளைப் பற்றிக் கூறுகிறோம். எமக்குத் தெரிந்த யாக்கூத்தியாவில் ஒரு பில்லியன் காரட்டுகளே உள்ளன," என்றார்.


உருசிய அரசுக்குச் சொந்தமான அல்ரோசா நிறுவனம் உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்க நிறுவனமாகும். இது கிழக்கு சைபீரியாவில் யாக்கூத்தியா பிரதேசத்தில் ஆர்க்டிக் பெருங்கடல் வரை பரந்துள்ளது.


மூலம் தொகு