செருமனியில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்

ஞாயிறு, சனவரி 30, 2011

கிழக்கு செருமனியில் இடம்பெற்ற தொடருந்து மோதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். 33 பேர் காயமடைந்தனர்.


நேற்று சனிக்கிழமை அன்று இரவு 1030 மணியளவில் சாக்சனி-ஆன்கால்ட் என்ற மாநிலத்தின் மாக்டபர்க் நகருக்கு அருகில் உள்ள ஓர்டோர்ஃப் என்ற ஊரில் உள்ளூர் பயணிகள் வண்டியும், சரக்கு வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதின.


பயணிகள் வண்டியில் மொத்தம் 45 பேர் மட்டுமே பயணித்திருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் வண்டியில் பல பெட்டிகள் தடம் புரண்டன. விபத்துக்கான காரணம் அறியப்படவில்லை. எனினும் அவ்விடத்தில் உள்ள ரெயில்வே பாதையில் இரவு நேரத் திருத்த வேலைகளுக்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்று தெரிவிக்கப்படுகிறது.


கடந்த சில ஆண்டுகளில் செருமனியில் பல தொடருந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 23 பேர் கொல்லப்பட்டனர். 1998, சூன் 3 ஆம் நாள் இடம்பெற்ற ஒரு பயங்கர விபத்தில் வடக்கு செருமனியில் பாலம் ஒன்றுட தொடருந்து ஒன்று மோதியதில் 101 பெர் கொல்லப்பட்டனர்.


மூலம் தொகு