செருமனியில் இசை விழா ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 19 பேர் உயிரிழந்தனர்

ஞாயிறு, சூலை 25, 2010

ஜெர்மனியில் டூஸ்பேர்க் நகரில் இடம்பெற்ற ஒரு இசை விழாவின் போது ஏற்பட்ட மக்கள் நெரிசலில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


இவ்விழாவின் போது இடம்பெற்ற "காதல் உலா" (love parade) என்றழைக்கப்படும் சிறப்பு உலா நிகழ்ச்சிப் பகுதிக்குள் சுரங்க வழியூடாகச் செல்லவிருந்த அளவுக்கதிகமான மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் அவர்களைத் தடுக்க முயன்றனர். இதன்போதே இந்த நெரிசல் ஏற்பட்டது. மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


இந்த அசம்பாவிதம் குறித்த விசாரணைகளைக் காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஜெர்மன் அரசுத் தலைவர் அங்கிலா மெர்க்கல் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழந்த கவலையைத் தெரிவித்துள்ளார்.


ஒரு மில்லியன் மக்கள் வரையில் இவ்விழாவில் கலந்து கொண்டதாக நம்பப்படுகிறது. நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 1700 (1500 GMT) மணிக்கு இந்த அசம்பாவிதம் நேரிட்டது.


மேலும் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் விழா உடனடியாக நிறுத்தப்படவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். "பல்லாயிரக்கணக்கானோர் மைதானத்தில் கூடியிருந்ததால் விழாவை இடைநிறுத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது," என நகர பேச்சாளர் பிராங்க் கோப்பாட்செக் தெரிவித்தார்.


உள்ளிருந்தவர்களுக்கு வெளியே என்ன நடந்ததென்பது தெரியாமலேயே இருந்ததென தெரிவிக்கப்படுகிறது.


பிரேசில், உருசியா, நெதர்லாந்து, ஸ்பெயின், மற்றும் ஆத்திரேலியா உட்படப் பல உலக நாடுகளிலும் இருந்து இவ்விழாவுக்கு ரசிகர்கள் வந்திருந்தனர். உலா பொதுவாக நகர வீதி வழியே கிட்டத்தட்ட 10 மணி நேரம் இடம்பெறுவது வழக்கம்.


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 27 வயதுப் பெண்ணொருவரும் இந்நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது.


இவ்விழா முதன் முதலில் 1989 ஆம் ஆண்டு பெர்லின் நகரில் பெர்லின் சுவர் இடப்பதற்கு 4 மாதங்களுக்கு முன்னர் அமைதி ஊர்வலமாக இடம்பெற்றது. பின்னர் அது திறந்தவெளி இசை விழாவாக மாற்றப்பட்டது.

மூலம் தொகு