சீனாவில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

வெள்ளி, ஆகத்து 24, 2012

சீனாவில் கடந்த ஆண்டு நவம்பரில் பல மில்லியன் டாலர்கள் செலவில் கட்டப்பட்ட பாலம் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் மூவர் கொல்லப்பட்டனர், மேலும் ஐவர் காயமடைந்தனர்.


எய்லோங்சியாங் மாகாணத்தின் கார்பின் நகரில் உள்ள யாங்மிங்ட்டட் பாலத்தின் 100 மீட்டர் நீளமான ஒரு பகுதி உடைந்ததில் அதில் சென்று கொண்டிருந்த நான்கு பாரவூர்திகள் கீழே வீழ்ந்ததாக சின்குவா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 05:30 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.


மட்டமான கட்டுமானத்தையும், பாரவூர்திகளின் பாரத்தையும் தாங்காததனாலேயே பாலம் உடைந்திருக்கலாம் எனவும் அது தெரிவித்துள்ளது. பாரவூர்திகள் அதிக பாரத்தைக் கொண்டு சென்றனவா என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.


சொங்குவா ஆற்றைக் கடந்து செல்லும் 15.42 கிமீ நீளமான இப்பாலம் 1.88 பில்லியன் யுவான் செலவில் கட்டப்பட்டது.


கடந்த ஆண்டு சூலை மாதத்திற்குப் பின்னர் சீனாவில் பாலம் உடைவது இது ஆறாவது தடவையாகும்.

மூலம் தொகு