கொங்கோ விமான விபத்தில் 19 பேர் உயிரிழப்பு

செவ்வாய், மார்ச்சு 22, 2011

கொங்கோ குடியரசின் வணிகத் தலைநகர் பொயிண்ட்-நொயிரேயின் மக்கள் நெருக்கமான பகுதி ஒன்றில் சரக்கு விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 பேர் கொல்லப்பட்டனர்.


டிரான்ஸ் ஏர் கொங்கோ என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த உருசியத் தயாரிப்பு அண்டோனொவ் விமானம் நேற்று திங்கட்கிழமை தரையிறங்க முயன்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 19 பேர் கொல்லப்பட்டதாகவும், 14 பேர் காயமடைந்ததாகவும் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகலாம் எனவும் அஞ்சப்படுகிறது.


பொயிண்ட்-நொயுரே நகரின் முவோ-முவோ மாவட்டத்தில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. விமானம் வீழ்வதற்கு சற்று நேரத்துக்கு முன்னதாக விமானி விமானத்தில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த ஆண்டு 2010 சூன் மாதத்தில் ஆத்திரேலியாவின் தொழிலதிபர் கென் டால்பொட் மற்றும் 10 பேர் பயணம் செய்த விமானம் கொங்கோவின் வடமேற்கில் வீழ்ந்து நொறுங்கியதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.


மூலம் தொகு