கென்யாவில் கிறித்தவக் கோயில்கள் மீது தாக்குதல், 10 பேர் உயிரிழப்பு

ஞாயிறு, சூலை 1, 2012

கென்யாவில் கிறித்தவக் கோயில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 40 பேர் வரையில் காயமடைந்தனர் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


சோமாலியா எல்லையில் உள்ள கரிசா என்ற நகரில் உள்ள கத்தோலிக்கத் தேவாலயம், மற்றும் ஆப்பிரிக்க உள்நாட்டுக் கோயில் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை கிரனைட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக பிராந்தியக் காவல்துறை அதிகாரி பிலிப் ந்டோலோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஞாயிறு காலை ஆராதனைக்காக மக்கள் கூடியிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டது.


அல்-சபாப் இசுலாமியத் தீவிரவாதிகளுடனான போருக்கு ஆதரவாக கென்யப் படைகள் சோமாலியாவுக்கு அனுப்பப்பட்டதை அடுத்து கென்யாவின் எல்லைப்பகுதிகளில் அண்மைக்காலங்களில் பதட்ட நிலை நிலவுகிறது. கென்ய மண்ணில் இடம்பெறும் ஆட்கடத்தல்களை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டே தாம் தமது படையினரை சோமாலியாவுக்கு அனுப்பியதாக கென்யா தெரிவிக்கிறது.


ஆனாலும், கென்யாவில் அண்மைக்காலங்களில் இடம்பெற்று வரும் தாக்குதல்களுக்கு தாமே பொறுப்பு என அல்-சபாப் இயக்கம் தெரிவித்திருந்தது.


மூலம் தொகு