குவாத்தமாலா தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி ஒட்டோ பெரெஸ் மொலினா வெற்றி

திங்கள், நவம்பர் 7, 2011

இலத்தீன் அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் அரசுத்தலைவருக்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் முன்னாள் இராணுவ ஜெனரல் ஒட்டோ பெரெஸ் மொலினா வெற்றி பெற்றுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


அனைத்து வாக்குகளின் எண்ணப்பட்ட நிலையில், மொலினா 55% வாக்குகளையும், மனுவேல் பால்டிசோன் 45% வாக்குகளையும் பெற்றுள்ளனர். இரண்டு வேட்பாளர்களும் நாட்டில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருதல், மற்றும் மெக்சிக்கோவின் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் நாட்டினுள் ஊடுருவதைத் தடுக்கவும் முன்னுரிமை தரப்போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர்.


ஐக்கிய அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே போதைப்பொருட்கள் குவாத்தமாலா ஊடாகவே கடத்தப்படுகின்றன.


வலதுசாரி நாட்டுப்பற்றுக் கட்சியின் தலைவரான பெரெஸ் மொலினா 10,000 காவல்துறையினரையும், 2,500 இராணுவத்தினரையும் புதிதாகப் பணியில் அமர்த்தவிருப்பதாகக் கூறியுள்ளார்.


36 ஆண்டுகால உள்நாட்டுப் போரை அடுத்து 1996 ஆம் ஆண்டில் மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது. 200,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


குவாத்தமாலாவின் அரசியலமைப்பின் படி, ஒருவர் ஒரு முறை மட்டுமே அரசுத்தலைவர் பதவியில் இருக்க முடியும்.


மூலம் தொகு