கிளிநொச்சியில் இடம்பெற்ற படுகொலை குறித்து விசாரணை வேண்டும் என கனடா வலியுறுத்தியது

சனி, மே 12, 2012

இலங்கையின் வடக்கே கடந்த வாரம் இடம்பெற்ற தமிழ் கனேடியர் ஒருவரின் படுகொலை குறித்து முழுமையான விசாரணை தேவை என கனடா அதிகாரபூர்வமாக இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.


இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அந்தோனிப்பிள்ளை மகேந்திரராஜா என்பவர் ஈழப்போரின் போது இழந்த தனது சொத்துக்களை மீளப் பெற இலங்கை சென்றிருந்தபோது இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளின் தலைமையிடமாக அமைந்திருந்த கிளிநொச்சி நகர் அவரது இருப்பிடமாகும்.


கிளிநொச்சியில் அவரது இருப்பிடத்துக்கருகில் சில குழுக்களினால் படுகொலை செய்யப்பட்டதாக இலங்கைக்கான கனடா தூதுவர் புரூஸ் லெவி தெரிவித்தார். முகமூடி அணிந்த சிலரினால் மகேந்திரராஜா தாக்கப்படுவதை உள்ளூர்வாசிகள் சிலர் அவதானித்துள்ளதாக ஈழ ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் இக்குழுவினரிடமிருந்த தப்பிப்பதற்காக மிகவும் போராடியதாகத் தெரிவிக்கின்றன. அத்துடன் அவரது அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டும் உள்ளன.


கிளிநொச்சியில் கடைகளின் உரிமையாளராக இருந்த மகேந்திரராஜா போர்க் காலத்தில் கனடாவில் குடியேறினார். அவரது சொத்துக்கள் பல்பொருள் அங்காடி நிறுவனம் மற்றும் ஏனைய வியாபார நிறுவனங்கள் வசம் உள்ளதாகவும் புரூஸ் லெவி தெரிவித்துள்ளார். தனது சொத்துக்கள் குறித்து இராணுவத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இராணுவ புலனாய்வுத் தரப்பினரால் அவரது நடமாட்டங்கள் அவதானிக்கப்பட்டதாகவும் சில வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


மூலம் தொகு