ஐநா செயலராக பான் கி மூன் இரண்டாவது தடவையாகத் தெரிவு

வியாழன், சூன் 23, 2011

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பதவியில் இருக்கும் பொருட்டு இரண்டாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நியூயோர்க்க்கில் கடந்த செவ்வாய் அன்று இடம்பெற்ற ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் இவர் தெரிவானார்.


பான் கி மூன்

தென் கொரியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான பான் கி மூனுக்கு எதிராக எவரும் போட்டியிடவில்லை. வல்லரசுகளைப் பொறுத்த அவரியில் பான் கி மூன் பாரபட்சமாகச் செயற்பட்டாலும், காலநிலை மாற்றம், மற்றும் மத்திய கிழக்கு, மற்றும் வட ஆப்பிரிக்க நடுகளில் இடம்பெற்று வரும் கிளர்ச்சிகள் தொடர்பாக அவரின் நிலைப்பாடுகள் சிறந்ததாக இருந்ததாக விமரிசகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


2007 ஆம் ஆண்டில் இவர் பொதுச் செயலராகப் பதவியேற்றார். இவரது இரண்டாவது தவணை 2012 சனவரி 1 இல் ஆரம்பமாகி, 2016 இல் முடிவடையும்.


இதற்கிடையில், இலங்கை உட்பட பல நாடுகளில் மனித உரிமை மீறல்களை தடுக்கத் தவறிவிட்டார் என்று பல மனித உரிமை அமைப்புக்கள் கருத்து வெளியிட்டிருந்தன. இலங்கையைப் பொறுத்தவரை பான் கி மூன் ஒரு உறுதியற்ற நிலைப்பாட்டையே கடைப்பிடித்தார் என்று மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குனரான பிராட் ஆடம்ஸ் பிபிசிக்குத் தெரிவித்துள்ளார். "பர்மா பிரச்சினையில் அவர் நிறைய அறிக்கைகளை விட்டார். ஆனால் பர்மிய அரசுக்கு எதிராக செயல்படுவதில் அவர் மிகவும் பலவீனமாக இருந்தார். அவருக்கு ஒரு கோர்வையான திட்டம், யுக்தி இல்லை. சீனாவைப் பொறுத்த வரை கடந்த இரு தசாப்த காலத்தில் நடந்த மிகவும் மோசமான ஒடுக்குமுறையின் போது அவர் அமைதி காத்தார் என்று அவர் கூறினார்.


மூலம் தொகு