ஏமன் மோதல்களில் 33 பேர் கொல்லப்பட்டனர்

புதன், சூலை 21, 2010

மத்திய கிழக்கு நாடான ஏமனில் அரசு சார்பு பழங்குடியினருக்கும், ஹூட்டி போராளிகளுக்கும் இடையில் கடந்த ந்நான்கு நாட்களாக இடம்பெற்ற கடும் மோதல்களில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஹூட்டிப் போராளிகள் வசமுள்ள வடக்கு மாகாணமான அம்ரனில் அரசு சார்பு பழங்குடியினர் தாக்குதலைத் தொடங்கியதை அடுத்து அங்கு சண்டை மூண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 12 போராளிகளும் 21 பழங்குடியினரும் கொல்லப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.


கடந்த பெப்ரவரி மாதத்தில் அரசுக்கும் போராளிகளுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்துக்குப் பின்னர் இடம்பெற்ற மிக மோசமான மோதல் இதுவாகும்.


அண்மையில்ல் ஆளும் கட்சிக்கும் முக்கிய எதிர்க்கட்சிக்கும் இடையில் கையெழுத்தான உடன்படிக்கையைத் தாம் ஆதரிப்பதாக ஹூட்டு போராளிகள் அமைப்பு கடந்த திங்களன்று கூறியிருந்தது.


2004 ஆம் ஆண்டில் இருந்து கடந்த பெப்ரவரி வரை நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

மூலம் தொகு