உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நிறைவடைந்தது

திங்கள், சூன் 28, 2010

கோயம்புத்தூரில் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை 27-ம் நாள் மாலை நிறைவடைந்தது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் பத்து இலட்சம் பேர் கலந்துகொண்டனர்.


நிறைவு விழா நிகழ்ச்சியில் இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார். இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உட்பட மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றார்கள். மாநாட்டையொட்டிய சிறப்பு நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.


நிறைவு விழாவில் பேசிய முதல்வர் மு. கருணாநிதி, தமிழ் வளர்ச்சிக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு உட்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.


இதில், கோவையில் செம்மொழி மாநாடு நினைவுப் பூங்கா அமைத்தல், தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க கோரிக்கை, தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க சட்டம், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க கோரிக்கை, ஐவகை நிலங்களின் பெயர்களில் பாரம்பரிய மரபணு பூங்கா, மதுரையில் தொல்காப்பிய உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கம் அமைத்தல், குமரிக் கண்டம் குறித்த அகழ்வாராய்ச்சி செய்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.


இலங்கைத் தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கேற்ற முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கருணாநிதி அறிவித்துள்ளார்.


கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 25 தன்னார்வலர்கள் முன்னின்று இரண்டரை நாட்கள் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்தினர். இதில் கணினியில் தமிழ்99 விசைப்பலகை வழி தமிழ்த் தட்டச்சு, செல்பேசியில் தமிழ் பயன்பாடு, விக்கித்திட்டங்கள், வலைப்பதிவுகள், கட்டற்ற மென்பொருள்கள், உபுண்டு போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிலரங்கு இடம்பெற்றது. இணைய மாநாட்டில் வலைப்பதிவுகள், விக்கிப்பீடியா பற்றிய கலந்துரையாடல் ஒன்றும் நடந்தது.


தமிழ் விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டமான விக்சனரியில் உள்ளிடுவதற்காக தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் கலைச்சொல் அகராதி அடங்கிய குறுந்தட்டு ஒன்றை மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் விக்கிப்பீடியர்களிடம் தமிழ்நாடு இணைய அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா கையளித்தார்.

மூலம் தொகு

 

]