இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை வேண்டும் என மனித உரிமைக் குழுக்கள் கோரிக்கை

வெள்ளி, திசம்பர் 10, 2010

இலங்கையில் இடம்பெற்ற ஈழப்போரின் இறுதியில் இலங்கைப் படையினரால் நிகழ்த்தப்பட்டதாகக் கருதப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் முழு விசாரணை நடத்த வேண்டும் என்று இரண்டு பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சி, மற்றும் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள புதிய காணொளிகளை அடுத்து பன்னாட்டு மன்னிப்பு அவை, மற்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் இக்கோரிக்கையை விடுத்துள்ளன.


நிர்வாணப்படுத்தப்பட்டு கைகள் பின்னால் கட்டப்பட்ட கைதிகளை சிப்பாய்கள் தலையிலும் காலிலும் சுட்டுக் கொல்லும் காட்சிகளை இந்த வீடியோ பதிவு காட்டுகிறது. அதில் தரையில் இரண்டு பெண்களின் உடல்கள் இருக்கின்றன. இதில் ஒருவர் விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியில் செய்தி அறிவிப்பாளராக இருந்த இசைப்பிரியா என்று அடையாள்ம் காண்ப்பட்டுள்ளார் என இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.


தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவை கோரியுள்ளன.


இறுதிப் போரில் இசைப்பிரியா கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கடந்த ஆண்டு கூறியிருந்தது. ஆனால் இசைப்பிரியா உள்ளிட்ட கைதிகள் நிராயுதபாணிகளாகவும், போர் முனையில் இல்லாத நிலையிலும் கொல்லப்பட்டதாகவே தெரிகிறது என இந்த மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன. இசைப்பிரியாவின் உடல் ஆடையுடனும், நிர்வாணமாகவும் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக இவ்வமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.


மூலம் தொகு