இறுதிக்கட்ட ஈழப்போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையை இலங்கை வெளியிட்டது

சனி, பெப்பிரவரி 25, 2012

2009 ஆம் ஆண்டு முற்பகுதியில் இலங்கையின் வடக்கே இடம்பெற்ற இறுதிக்கட்ட ஈழப்போரில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை 8,649 என இலங்கை அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் 7,000 இற்கும் அதிகமானோர் நேரடியாக இராணுவத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் ஆவர்.


ஐக்கிய நாடுகள் செயலர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழு இறந்தோரின் எண்ணிக்கையை 40,000 வரை எனக் கூறியிருந்தது.


2009 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் 7,400 பேர் இறந்ததற்கான காரணம் கூறப்பட்டிருக்கவில்லை. வேறு காரணங்களினால் இறப்பு ஏற்பட்டதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அவர்கள், இயற்கையாகவோ, விபத்திலோ, தற்கொலை செய்தோ அல்லது தனிப்பட்ட கொலை மூலமோ இறக்கவில்லை என்பதாகும். எனவே இவர்கள் மோதலினால் இறந்திருக்கலாம். இவர்களில் பெரும்பாலானோர் இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்திலேயே இறந்துள்ளனர்.


அரசுப் புள்ளி விபரங்களின் படி 2,600 இற்கும் அதிகமானோர் 2009 ஆம் ஆண்டில் காணாமல் போயுள்ளனர்.


அரசாங்கம் தனது மக்கள் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கை ஒன்றை சந்தடி எதுவும் இன்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. கடந்த ஆண்டு சூன் மாதம் முதல் ஆகத்து மாதம் வரை சுமார் 2500 தமிழ் பேசும் அரச ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மூலம் தொகு