இரசியாவின் தாகெஸ்தானில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் ஐந்து இராணுவத்தினர் உயிரிழப்பு

திங்கள், செப்டம்பர் 6, 2010

தெற்கு ரஷ்ய மாநிலமான தாகெஸ்தானில் இராணுவத் தளம் ஒன்றில் தற்கொலைக் கார்க் குண்டு ஒன்று வெடித்ததில் ஐந்து இராணுவத்தினர் கொல்லப்பட்டு, மேலும் 40 பேர் காயமடைந்தனர்.


இரசியாவில் தாகெஸ்தான் மாநிலம்
தாகெஸ்தான் வரைபடம்

வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த லாடா தானுந்து ஒன்று புய்னாஸ்க்ஸ் என்ற இடத்தில் உள்ள இராணுவக் காவல் அரணை உடைத்துக் கொண்டு சென்று வெடிக்க வைக்கப்பட்டதாக இராணுவப் பேசாலர் ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் சனிக்கிழமை அன்று அதிகாலை 0100 (2100 GMT) நேரத்திற்கு இடம்பெற்றது.


இதில் ராணுவ வாகனம் ஒன்றும், வீரர்கள் தூங்கிக் கொண்டிருந்த கூடாரங்களும் தீப்பிடித்து எரிந்தன என்று கூறப்படுகிறது.


இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தாகெஸ்தானில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் குண்டுவெடிப்புகளும் வழமையானது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


முன்னதாக தலைநகர் மக்காச்கலாவில் இடம்பெற்ற ஒரு தாக்குதலில், தாகெஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்முர்சா பெர்மூர்சாயெவ் படுகாயமடைந்தார். அவரது சாரதி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

மூலம்