அலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு மே 14ம் தேதி

சனி, மே 7, 2011

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி) ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக ராஜ்ய சபா உறுப்பினரும், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான உத்தரவை வரும் மே 14 ம் பிறப்பிப்பதாகவும், அதுவரை கனிமொழியும் சரத்குமாரும் தினமும் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் நீதிபதி இன்று அறிவித்தார்.


நேற்றும் இன்றும் இந்த வழக்கு விசாரணை நடந்தது. கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதாடினார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அவர் கூறினார். சரத்குமார் தரப்பில் அப்துல் அஜீஸ் வாதாடினார்.


முன்னதாக சி.பி.ஐ., வழக்கறிஞர் தனது வாதத்தி்ல், சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜாவுடன் கனிமொழிக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என்றும், சரத்குமார் கலைஞர் த‌ொலைக்காட்சியின் நிர்வாக மூளையாக இருந்தாலும், கனிமொழி இந்த தொலைக்காட்சியின் அனைத்து விடயங்களையும், தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து பின்னணியில் இருந்து செயல்பட்டார் என்றும், இவருக்கு முன்பிணை வழங்கக் கூடாது என்றும் எடுத்துரைத்தார். இது குறித்து வரும் 14 ம் தேதிக்குள் தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.


வரும் மே 13ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு