அமெரிக்க மின்னுற்பத்தி நிலையத்தில் பெரும் வெடிப்பு, 5 பேர் உயிரிழப்பு

திங்கள், பெப்பிரவரி 8, 2010


அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கனெடிகட் மாநிலத்தில் மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் ஞாயிறு நண்பகல் அளவில் இடம்பெற்ற பெரும் வெடிப்பில் சிக்கி 5 பேர் உயிரிழந்து, மேலும் 12 பேர் காயமடைந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஐக்கிய அமெரிக்காவில் கனெடிகட் மாநிலம்

வாயுக்கலன் வெடிப்பே இதற்குக் காரணம் என மிடில்டவுன் நகர மேயர் செபஸ்டியான் கிலியானோ தெரிவித்தார்.


50 கிமீ தூரத்துக்கு இவ்வெடிப்பின் சத்தம் கேட்டதாகவும் வீடுகள் அதிர்ந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.


இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தவிர்த்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவாயிற்று என்பது குறித்து இன்னமும் தகவல்கள் வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.


பயங்கரவாதச் செயல் இதற்குக் காரணமில்லை என மேயர் தெரிவித்தார். இந்த மின்னுற்பத்தி நிலையம் வரும் கோடை காலத்திலேயே முழுமையாகச் செயற்படவிருந்தது எனவும், இதற்கு முன்னோடியாகப் பலா சோதனைகள் அங்கு இடம்பெற்றதாகவும் மேயர் தெரிவித்தார்.


100 இலிருந்து 200 பேர் வரையில் இந்நிலையத்தில் பணியில் இருந்தனர் என மேயர் தெரிவித்தார்.

மூலம்