வோடபோன் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1,200 கோடி அபராதம்

வியாழன், சூன் 6, 2013

வோடபோன் இந்தியா நிறுவனம் தனது வருமானத்தைக் குறைத்துக் கணக்குக் காட்டி மோசடி செய்தததற்காக ரூ.1,263 கோடி அபராதம் விதித்து நடுவண் தொலைத் தொடர்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


மேலும், இந்த அபராதத் தொகையை 15 நாட்களுக்குள் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டில் அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது நோட்டீஸ் ஆகும்.


வோடபோன் இந்தியா நிறுவனம் கடந்த 2008-2009 மற்றும் 2010-11 ஆகிய இரண்டு நிதியாண்டுகளில் ஈட்டிய வருவாய், வரி மற்றும் வட்டி போன்றவற்றை மறைத்து வருவாயைக் குறைத்துக் காண்பித்து மோசடி செய்துள்ளதை மத்தியத் தொலைத் தொடர்புத் துறை கண்டுபிடித்துள்ளது.


இதனையடுத்து, 2008-2009 ஆம் நிதியாண்டிற்கு ரூ.715 கோடியும், 2010-11 ஆம் நிதியாண்டிற்கு ரூ.548 கோடியும் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதத் தொகையை 15 நாட்களுக்குள் செலுத்தவும், இது குறித்து விளக்கமளிக்கவும் அந்நிறுவனத்திற்து தொலைத் தொடர்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


மேலும், கடந்த ஆண்டு இந்நிறுவனங்களின் 2006-07 மற்றும் 2007-08 ஆம் நிதியாண்டிற்களுக்கான கணக்குகளை தணிக்கை செய்வதற்காக தொலைத் தொடர்புத்துறை குழு ஒன்றை அமைத்தது. அக்குழு ஆய்வு செய்ததில், இந்நிறுவனம் இக்காலகட்டத்தில் ரூ.20 ஆயிரம் கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

மூலம் தொகு