லேசர் மூலம் காகிதத்தில் உள்ள மையை அழிக்கும் முறையை பொறியியலாளர்கள் கண்டுபிடிப்பு

ஞாயிறு, மே 20, 2012

அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் உள்ள மையை லேசர் மூலம் அழிக்கும் செயற்பாட்டை லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் அச்சடிக்கும் இயந்திரங்கள் மற்றும் நகலெடுக்கும் இயந்திரங்கள் போன்றவற்றில் மறுசுழற்சி செய்யாமலே காகிதங்களை மீண்டும் உபயோகிக்க இயலும்.


இந்த செயற்பாட்டில் அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் உள்ள எழுத்து மற்றும் படங்களை குறுகிய லேசர் கதிர்களைக் கொண்டு, அவை ஆவியாகும் வரை வெப்பப்படுத்தி அழிக்கப்படுகிறது. இம்முறை காகிதம் உருவாக்குவதற்கு மரங்களை வெட்டுவதை குறைக்கவும், மறுசுழற்சி முறைக்கு ஒரு மாற்று வழியாகவும் இருக்கும் என இம்முறையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள் குழுவைச் சேர்ந்த டேவிட் லீல் அயாலா தெரிவித்துள்ளார்.


இந்த இயந்திரத்தை வடிவமைக்க 19000 யூரோக்கள் வரை செலவாகும் என இக்குழுவினர் கணித்துள்ளனர். இப்பொறியாளர்கள் இந்த கருத்தை முதலில் கண்டுபிடித்தவர்கள் இல்லை எனினும் இவர்கள் இச்செயற்பட்டில் காகிதத்தின் வண்ணம் மாறுவது அல்லது காகிதம் கிழிந்து விடுவது அல்லது இதற்கென வடிவமைக்கப்பட்ட மையைப் பயன்படுத்துவது போன்ற குறைபாடுகளைக் களைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.


மூலம் தொகு