யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, மணலாறு பகுதிகளில் மோதல்; 10 படையினர் பலி

வெள்ளி, ஏப்பிரல் 4, 2008 இலங்கை:

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மற்றும் மணலாறு பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் முழுவதும் இடம்பெற்ற மோதல்களில் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். மோதல்களின் போது 45 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 30 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.


நேற்று முன்தினம் அதிகாலை முதல் தொடர்ந்து இடம்பெற்ற இம்மோதல்களின் போது விடுதலைப் புலிகளின் முன்னரங்கு நிலைகள் மீது படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தாக்குதல்களை நடத்தியவாறு புலிகளின் முன்னரங்கு நிலைகளை நோக்கி படையினர் முன்னகற முயற்சித்த போது விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர்.


பதில் தாக்குதல்களை அடுத்தே இரு தரப்பினர்களுக்கும் இடையில் கடும் மோதல்கள் ஆரம்பித்ததாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இம்மோதல்களை அடுத்து அப் பகுதிகளில் படையிடினரால் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது.