பேரண்டம் விரைவாக விரிவடைவதைக் கண்டுபிடித்த மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

செவ்வாய், அக்டோபர் 4, 2011

எமது பேரண்டம் விரைவாக விரிவடைந்து கொண்டிருப்பதைக் கண்டுபிடித்த மூன்று ஆய்வாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்த சோல் பேர்ல்மட்டர், அடம் ரீஸ் மற்றும் ஆத்திரேலியாவைச் சேர்ந்த பிறையன் சிமித் ஆகியோர் இப்பரிசைப் பெறுகின்றனர்.


சுப்பர்நோவா வகை 1 என்ற விண்மீன் வெடிப்பை ஆராய்ந்த இவர்கள் தூரவுள்ள பொருட்கள் மிக விரைவாக நகருவதைக் கண்டறிந்தனர். பேரண்டம் விரிவடைவது மட்டுமல்லாமல், அது அது மிக விரைவாக விரிவடைகிறது என்பதையும் கண்டுபிடித்தார்கள். இதன் மூலம் பேரண்டத்தின் ஆரம்பம் பற்றிய அறிவைப் பெற முடியும் என நம்பப்படுகிறது.


கரிய ஆற்றல் (dark energy) என்பது பேரண்டத்தை விரிவடையச் செய்ய உதவும் ஒரு புதிரான விசை ஆகும். இக்கரிய ஆற்றல் எவ்வாறு பேரண்டத்தில் பகுக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்ததில், பேரண்டம் விரிவடைகிறது எனத் தெரிய வந்தது.


பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பேர்ல்மட்டருக்கு 5 மில்லியன் சுவீடிய குரோனர்களும், ஆத்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிமித், ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரீஸ் தலா 2.5 மில்லியன்களும் பரிசாகப் பெறுவர்.


மூலம் தொகு