பெரியார் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

திங்கள், மார்ச்சு 4, 2013

பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி சிறப்புரையாற்றுகின்றார்
பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சியை அளிக்கின்றார்


பெரியார் பல்கலைக்கழக மேட்டுர் உறுப்புக் கல்லூரி, மார்ச் 1 முதல் மாசிலாபாளையத்தில் தேசிய நாட்டுநலப்பணித்திட்ட முகாமினை ஒருங்கிணைத்துள்ளது.


தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியுள்ள சூழலில் மாணவர்களுக்கு தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா விழிப்புணர்வு, பயிற்சி தேவையைக் கருத்தில் கொண்டு, பெரியார் பல்கலைக்கழக மேட்டுர் உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் மோ. தமிழ்மாறன் தமிழ் விக்கிப்பீடியா, தமிழ்க்கணினிப் பயிலரங்கு நிகழ உறுதுணை செய்தார்.


கடந்த ஞாயிறு மார்ச் 3 அன்று மாசிலாபாளையத்தில், தேசிய நாட்டுநலப்பணித்திட்ட முகாமில், பிற்பகல் 2.00 மணிமுதல் மாலை 6.00 மணி வரை, அரசு தொடக்கப்பள்ளியில் நிகழ்ந்த தமிழ் விக்கிப்பீடியா, தமிழ்க்கணினிப் பயிலரங்கில் 200 மாணவர்களும் ஊர்ப்பொது மக்களும் பங்கேற்றனர். இந்நிகழ்வில், முனைவர் கணேசன் தொடக்க உரை ஆற்றினார்.


பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பாடல் துறையின் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ்க்கணினி பயிலரங்கில் பயிலரங்க நோக்கங்களை அறிமுகம் செய்து, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் ஆகிய பொருண்மைகளில் சிறப்புரை நிகழ்த்தி, மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சி அளித்தார்.


பெரியார் பல்கலைக்கழக மேட்டுர் உறுப்புக்கல்லூரியில், தேசிய நாட்டுநலப்பணித்திட்டத்தில் உள்ள 4 அலகுகளின் மாணவர்களும் பங்கேற்றனர். முனைவர் கணேசன், முனைவர் சந்திரன், திருமதி சத்யா, முனைவர் விஜயராணி ஆகிய பேராசிரியர்கள் இம்முகாமினை ஒருங்கிணைத்தனர். ஊரக மாணவர்களிடையே விக்கிப்பீடியா விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் இந்நிகழ்வு தமிழ் விக்கி பயணத்தில் நல்லதொரு தொடக்கம் ஆகும்.