நோக்கியா மைக்ரோசாப்ட் உடன் இணைந்து செயல்பட முடிவு

வெள்ளி, பெப்பிரவரி 11, 2011

ஐபோன், மற்றும் கூகுளின் அண்ட்ரோய்ட்-தள நகர்பேசிகளுடன் தாக்குப்பிடிக்க நோக்கியா நிறுவனம் தற்போது மைக்குரோசொஃப்ட் உடன் இணைந்து செயற்பட முடிவு செய்துள்ளது.


புதிய ஒப்பந்தப்படி, நோக்கியா தனது நுண்ணறிபேசிகளுக்கு (smartphones) வின்டோஸ் தொலைபேசி இயங்குதளத்தைப் பயன்படுத்தும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து நோக்கியா தற்போது பயன்படுத்தும் சிம்பியன் என்ற தனது இயங்குதளத்தின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்து வரும்.


மைக்குரோசொஃப்ட் உடனான புதிய ஒப்பந்தம் பற்றி அறிவித்த நோக்கியாவின் தலைமை இயக்குநர் ஸ்டீவன் இலொப், “இக்கூட்டிணைவை அடுத்து உலகளாவிய ரீதியில் நோக்கியா நிறுவனங்களில் பலர் தமது தொழில்களை இழக்க நேரிடும்,” எனக் கூறினார். தாம் இப்போதும் பின்லாந்தில் உள்ள நோக்கியா நிறுவனத்தையே எமது முதன்மை நிறுவனமாக வைத்திருப்போம்,” என்றார் அவர்.


புதிய ஒப்பந்தப்படி, மைக்குரோசொஃப்ட்டின் பிங் தேடுதளம் நோக்கியா தொலைபேசிகளில் தேடுதல்களுக்கும், அதே வேளையில், ”நோக்கியா மாப்ஸ்” (Nokia Maps) சேவையை மைக்குரோசாப்ட் பயன்படுத்தும்.


விண்டோஸ்-தளத்தைக் கொண்டு இயங்கும் முதலாவது நுண்ணறிபேசி எப்போது வெளியிடப்படும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. முன்னர் அறிவிக்கப்பட்ட நோக்கியாவின் மீகோ இயங்குதளமும் பயன்படுத்தப்பட மாட்டாது எனத் தெரியவருகிறது.


2010 ஆம் ஆண்டில் நுண்ணறிபேசி சந்தையில் நோக்கியாவின் பங்கு 38% இலிருந்து 28% இற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.


மூலம் தொகு