தமிழ் திரைப்பட இயக்குனர் - தெய்வத்திரு A.C. திருலோகச்சந்தர்.

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் திருலோகச்சந்தர் அவர்களின் பிறந்த தினம் இன்று. அவர் தமிழ்நாட்டில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆற்காடு நகரத்தில் 1930ம் வருடம் ஜூன் 11ந்தேதி பிறந்தார். சினிமா துறையில் ஆர்வம் கொண்டு, இளம் வயதிலேயே சினிமா துறையில் உதவி இயக்குனராக நுழைந்தார். இவர் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் - "வாளும் விழியும்". இந்த படம் சில காரணங்களால் திரைக்கு வரவில்லை. மனம் தளராமல் - "வீரத்திருமகன், நானும் ஒரு பெண், அதே கண்கள், ராமு, எங்க மாமா" என பல வெற்றிப்படங்களை தந்தார்.

நடிகர் சிவாஜி கணேசனுடன் இணைந்து 25 படங்கள் வரை பணி புரிந்தார். மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் இணைந்து "அன்பே வா" என்ற மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கி வெளியிட்டார்.

இவர் இயக்கிய "தெய்வமகன்" என்ற திரைப்படம் பிரபலமான ஆஸ்கர் திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த வகையில் தமிழில் வெளியாகி முதன் முதலில் பரிந்துரைக்கப்பட்ட படம் இது தான்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் 65 திரைப்படங்கள் வரை இவர் இயக்கியுள்ளார். திருலோகச்சந்தர் 2016ம் வருடம் ஜூன் 15ந்தேதி தனது 86வது வயதில் காலமானார்.

(ஆதாரம் - தினமலர் நாளிதழ்-11.06.2021)