சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பிரித்தானியத் தம்பதியர் விடுவிப்பு

திங்கள், நவம்பர் 15, 2010

13 மாதங்களுக்கு முன்னர் சோமாலியா கடற்கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்ட பிரித்தானியத் தம்பதியினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.


இங்கிலாந்தின் கெண்ட் நகரைச் சேர்ந்த போல் (60), ரேச்சல் (56) ஆகியோர் அக்டோபர் 2009 அன்றி சீசெல்சில் இருந்து படகில் தனியே புறப்பட்ட போது கடற்கொள்ளைக்காரர்கள் அவர்களைப் பிடித்தனர். இவர்களை விடுவிப்பதற்காக கடற்கொள்ளையர்கள் 7 மில்லியன் டாலர்களைக் கப்பமாக கோரியிருந்தனர். ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் கப்பமாகக் கட்டப்பட்டே இவர்கள் விடுவிக்கப்பட்டதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனாலும் ஐக்கிய இராச்சிய அரசு இப்பணத்தைச் செலுத்தவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


தற்போது கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள பிரித்தானியத் தூதரகத்தில் தங்கியிருக்கும் இத்தம்பதியினர் விரைவில் நாடு திரும்புவர். முந்னதாக இவர்கள் எத்தியோப்பிய எல்லைப்பகுதியில் உள்ள அடாடோ என்ற சோமாலியப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.


தம்மை கடற்கொள்ளைக்காரர்கள் மிகவும் துன்புறுத்தியதாக சாண்ட்லேர்ஸ் தம்பதியினர் தெரிவித்தனர். மிருகங்களைப் போலத் தாம் நடத்தப்பட்டதாகவும் ஆனாலும் தாங்கள் ஆரோக்கியமாக உள்ளதாகவும் இருவரும் பிரித்தானிய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.


கடந்த சூன் மாதத்தில் $430,000 கப்பமாகக் கட்டப்பட்டது. ஆனாலும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. கொள்ளைக்காரர்கள் மேலும் பணம் எதிர்பார்த்தார்கள். பிரித்தானியாவில் உள்ள சோமாலிய மக்களினாலும், வேறு நலம் விரும்பிகளாலும் பணம் திரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.


மூலம் தொகு