செவ்வாய்க் கோளில் 600 மில். ஆண்டுகளாகக் கடும் வறட்சி, ஐரோப்பிய ஆய்வாளர்கள் கருத்து

திங்கள், பெப்பிரவரி 6, 2012

செவ்வாய்க் கோளில் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக கடும் வறட்சி நிலவுவதால், அங்கு உயிரினம் வாழ்வதற்கு சாத்தியம் இல்லை என செவ்வாயில் இருந்து பெறப்பட்ட மண் மாதிரிகளை ஆராய்ந்த ஐரோப்பிய அறிவியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த முனைவர் டொம் பைக் என்பவர் இது குறித்தான ஆய்வறிக்கையை இம்மாதம் ஏழாம் தேதி நடைபெறவிருக்கும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ஈசா) கூட்டத்தில் சமர்ப்பிப்பார். 2008 ஆம் ஆண்டில் நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் சேகரித்த மண் மாதிரிகளை இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்திருந்தனர். பீனிக்ஸ் விண்ணூர்தி செவ்வாயின் வடக்கு ஆர்க்ட்டிக் பகுதியில் தரையிறங்கி அதன் மேற்பரப்பில் பரிசோதனைகளை நடத்தியிருந்தது.


பீனிக்ஸ் இறங்கிய பகுதியில் பனிக்கட்டிகள் காணப்பட்டிருந்தாலும், பல மில்லியன் ஆண்டுகளாக அதன் மேற்பரப்பில் வரட்சி நிலவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய்க் கோளின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மணல் ஒரே சீரான தன்மையானவை என முன்னர் நிறுவப்பட்டிருந்தது. இதனால் செவ்வாயின் மேற்பரப்பு முழுவதும் வரண்ட தன்மையே காணப்படும் என அவர்கள் கூறுகின்றனர்.


மூலம் தொகு