சூடானில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் பல-கட்சிப் பொதுத் தேர்தல்

திங்கள், ஏப்பிரல் 12, 2010

24 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்பிரிக்க நாடான சூடானில் பலகட்சித் தேர்தல் நேற்று ஆரம்பமானது. அரசுத்தலைவர், நாடாளுமன்றம், மற்றும் சட்டமன்றப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மூன்று நாட்கள் நடைபெறும்.


தலைநகர் கார்ட்டூமில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது எனினும், ஏனைய இடங்களில், குறிப்பாக செங்கடல் முதல் தூரதெற்குப் பகுதிகளில் வாகாளர்கள் பலவித இடர்ப்பாடுகளைச் சந்தித்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


தெற்கின் முக்கியமான கட்சி தேர்தல் நான்கு நாட்களுக்கு இடம்பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.


சூடானின் வடக்கு-தெற்கு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததை அடுத்தே தேர்தல்கள் இடம்பெறுகின்றன. வெற்றி வாய்ப்பு தனக்கே கிடைக்குமென அரசுத்தலைவர் ஒமர் அல் பசீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


நேர்மையான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்க முடியாதென இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகள் கூறியதுடன் போட்டியிலிருந்தும் விலகிக் கொண்டன. இதனால் முடிவுகள் பசீருக்கு சாதகமாக முடியும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


தார்ஃபூரில் உள்நாட்டுப்போரை நடத்திய விதம் தொடர்பாக அதிபர் ஒமர் அல் பசீர் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தால் பிடியாணைக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


2003ம் ஆண்டிலிருந்து சூடானின் தார்பூர் பிரதேசத்தில் மோதல்கள் இடம் பெறுகின்றன. மூன்று இலட்சம் பேர் உயிரிழந்து, மேலும் இலட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். டர்புர் மோதலை முடித்து வைக்க அங்கு சுயாட்சி வழங்கப்படவேண்டுமென அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகிறது.


வடக்கு-தெற்கு உள்நாடுப்போர் 2005 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. சூடானில் மக்க விடுதலை இயக்கம் (SPLM) பசீரின் அரசுடன் அதிகாரப் பகிவுக்கு உடன்பட்டது. அதே நேரத்தில் தெற்கில் தமது அரசை அமைக்கவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மூலம் தொகு