சூடானில் 2005 அகதிகள் கலவரத்தில் ஈடுபட்ட 6 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

வெள்ளி, சனவரி 15, 2010


2005 ஆம் ஆண்டில் சூடானில் கார்ட்டூம் நகரில் இடம்பெற்ற அகதி முகாம் கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்ட 6 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.


இக்கலவரத்தின் போது 13 காவல்துறையினரின் இறப்புக்கும், மேலும் 5 அகதிகளின் இறப்புக்கும் இவர்கள் காரணமாக இருந்தார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.


இரண்டு தசாப்த காலமாக அங்கு இயங்கிவந்த சோபா அராடி அகதி முகாமை மூடுவதற்கு காவல்துறையினர் எத்தனித்த வேளையிலேயே அங்கு கலவரம் வெடித்தது.


சூடானிய அரசின் இந்த மனிதாபமானமற்ற செயலை பன்னாட்டு மன்னிப்பு அவை கண்டித்திருக்கிறது. இவர்கள் அனைவரும் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கட்டாயமாக ஒப்புக்கொடுத்தவர்கள் என்றும் அது சாடியது.


இந்த மரணதண்டனைகள் வடக்கு மற்றும் தெற்கு அரசியல்வாதிகளின் அமைதிப் பேச்சுக்களுக்குக் குந்தகம் விளைவிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.


மரணதண்டனைக்குட்படுத்தப் பட்டவர்கள் சிலர் சர்ச்சைக்குரிய டார்பூர் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.


22-ஆண்டுப் போரில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் சூடானியர்கள் இறந்துள்ளார்கள். 2005 அமைதிப் பேச்சுக்களின் முடிவில், ஏப்ரல் மாதம் நடைபெற விருக்கும் பொதுத் தேர்தல்கள் வரை அங்கு ஆட்சிப் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதென வடக்கு, தெற்குத் தலைவர்கள் உடன்பாடு கண்டிருந்தனர்.

மூலம் தொகு