நைஜீரியாவில் பொது மன்னிப்பின் கீழ் போராளிகள் ஆயுதங்களுடன் சரணடைவு

திங்கள், அக்டோபர் 5, 2009, நைஜீரியா:


நைஜீரியாவின் நைகர் டெல்ட்டா பகுதியில் அரசின் பொது மன்னிப்பிற்கான அறிவிப்பை அடுத்து அங்கு ஆயிரக்கணக்கான போராளிகள் தமது ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


உள்ளூர் போராளிகள் தலைவர் டொம்போலோ பொது மன்னிப்பை அடுத்து நைஜீரிய அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். 2003 ஆம் ஆண்டில் நைஜீரிய மேற்கு டெல்ட்ட பகுதியில் மற்றும் பல போராளிகளுடன் சேர்ந்து பெரும் தொகையான எண்ணெயைத் தடுத்து வைத்திருந்தமைக்காக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.


நைஜீரிய அதிபர் யாராடுவா

ஆர்ட்டெகெ டொம் என்ற இன்னும் ஒரு குழுவின் தலைவர் தனது ஐயாயிரம் போராளிகளுடன் ஹார்க்கோர்ட் துறையில் ஆயுதங்களுடன் சரணடைந்தார். ஆனாலும், நைஜீரிய அரசு தாம் உறுதியளித்த படி தமது பகுதியில் முதலீடு எதுவும் செய்யவில்லையானால், தாம் மீண்டும் ஆயுதங்களைத் தூக்குவோம் என அவர் எச்சரித்தார்.


வேறு சில போராளிக் குழுக்கள் இந்தப் பொது மன்னிப்பை நிராகரித்தனர்.


இந்த சரணடைவை அடுத்து, நாளொன்றுக்கு ஒரு மில்லியன் பரல்கள் எண்ணெயை டெல்ட்டா பகுதியில் இருந்து தருவிக்க முடியும் என அரசு எதிர்பார்க்கிறது.

மூலம்