ஊடகவியலாளர் யசீகரனும் அவரது மனைவியும் விடுதலை

செவ்வாய், அக்டோபர் 27, 2009, கொழும்பு:


இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த கொழும்பில் இருந்து வெளிவந்த நோர்த் ஈஸ்டேர்ன் எரல்ட் என்ற சஞ்சிகையின் வெளியீட்டாளரும் அச்சக உரிமையாளருமான யசீகரனும் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.


இவர்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த பயங்கரவாத தடுப்புசட்டத்தின் கீழான வழக்குகள் இரண்டையும் இலங்கை சட்டமா அதிபர் விலக்கிக்கொண்டதை அடுத்து இவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.


இனவாத உணர்வுகளை தூண்டும் வகையிலான சஞ்சிகை யொன்றை அச்சிட்டு வெளியிட்டமை, அதற்காக சதிசெய்தமை, சஞ்சிகைக்காக வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றமை போன்ற குற்றச்சாட்டுகள் யசீகரன் மீதும் அவருக்கு உடந்தையாய் இருந்ததாக யசீகரன் மனைவி மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்ததது.


இந்த நிலையில் ஜசீகரன் மற்றும் அவரது மனைவி வளர்மதியும் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் பல சித்திரவதைக்குள் உள்ளாவதாகவும் அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.


இந்த நிலையில் இந்த வழக்கை மீள எடுத்துக் கொள்ளப்பட்டால் இவர்கள் இருவரையும் விடுதலை செய்யலாம் என சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து இரு தரப்பும் பேசி இணக்கம் காணப்பட்டுள்ளதை அடுத்து இருவரும் விடுதலை அடைந்துள்ளனர்.


இதே சஞ்சிகையை பிரசுரித்தமை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திசைநாயகத்துக்கு 20 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டணையை கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றம் விதித்திருந்தது.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்