ஈரானிய இயற்பியலாளர் கொலையில் தமக்குத் தொடர்பு இல்லை: அமெரிக்கா அறிவிப்பு

வியாழன், சனவரி 14, 2010


ஈரான் தலைநகர் தெகரானில் இயற்பியல் பேராசிரியர் ஒருவர் செவ்வாயன்று கொலை செய்யப்பட்டதற்கும் தமக்குத் தொடர்புள்ளதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஐக்கிய அமெரிக்கா மறுத்துள்ளது.


ஈரானின் அணுவியல் விஞ்ஞானி மெளசூத் அலி மொகம்மதி என்பவர் கார்க் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார். தெகரான் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியரான இவர் ஈரானின் அறிவியல் வளர்ச்சியில் முக்கிய இடம் வகிப்பவர்.


கடந்த செவ்வாய்க்கிழமை தனது வீட்டிலிருந்து பல்கலைக்கழகம் செல்வதற்காகப் புறப்பட்ட வேளை அருகிலிருந்த மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குண்டு தானியங்கி மூலம் வெடிக்க வைக்கப்பட்டது.


ஈரானின் அணுவாயுதத் திட்டத்தில் இவருக்குத் தொடர்பிருக்கவில்லை என இப்போது தெரிவிக்கப்படுகிறது. உண்மையில் இத்திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர் இவர்.


இக்கொலைக்குப் பின்னால் இஸ்ரேலும் அமெரிக்காவும் உள்ளதாக ஈரான் ஜனாதிபதி அகமெதிநெசாத் குற்றம்சாட்டினார். இது போன்ற தாக்குதலை இசுரேலின் மொசாட் அமைப்பே வெளிநாடுகளில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


இப்பேராசிரியர் அரசியலில் ஈடுபடவில்லை எனவும் சில தகவல்கள தெரிவிக்கின்றன. ஆனாலும் 2009 ஆம் ஆண்டில் அரசூத் தலைவர் தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சித் வேட்பாளரை ஆதரிப்பவர்களின் பட்டியலில் இவருடைய பெயரும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


மூலம் தொகு